Published : 26 Jun 2019 09:08 PM
Last Updated : 26 Jun 2019 09:08 PM
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மூன்று திருநங்கைகளை எழுத்துத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான 2 ஆயிரத்து 465 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 6-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கு விண்ணப்பிக்க பொது பிரிவினருக்கு 24 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் ஆகியோருக்கு 26 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 29 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினருக்கு 45 வயது என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
திருநங்கைகள் சீர்மரபினர் பிரிவில் வருவதால் 26 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45-ஆக உயர்த்தி புதிய அறிவிப்பாணை வெளியிடகோரி சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், மனுதாரர்கள் மூன்று பேரின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு, அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT