கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விண்கல் என்று 5 கிலோ கல்லுடன் வந்தவரால் பரபரப்பு 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விண்கல் என்று 5 கிலோ கல்லுடன் வந்தவரால் பரபரப்பு 
Updated on
1 min read

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு 'விண்கல்' என்று 5 கிலோ கல்லுடன் வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கோவை பீளமேடு காந்தி மாநகரைச் சேர்ந்த கே.லட்சுமி நாராயணன் (65) என்பவர், 5 கிலோ எடையுள்ள கல்லுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கே.லட்சுமி நாராயணன் கூறியதாவது: "கோவை வெள்ளலூர் பகுதியில் எங்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து என்னுடைய மூத்த சகோதரர் 5 கிலோ எடையுள்ள இந்தக் கல்லைக் கொண்டு வந்தார். இந்தக் கல்லில் காந்தத்தை வைத்த போது ஒட்டிக் கொண்டது. பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருந்தது. இதனால் நாங்கள் பல ஆண்டுகளாக வீட்டில் வைத்துப் பாதுகாத்து வந்தோம்.

இந்நிலையில் என்னுடைய மூத்த சகோதரரின் நண்பர்கள் சமீபத்தில் இது 'விண்கல்' என்று தெரிவித்தனர். கோவை மாவட்ட சுரங்கம் மற்றும் புவியியல் துறையினரும் இதை விண்கல் என்று உறுதிப்படுத்தியுடன், இஸ்ரோ, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சிக்கு பயன்படக்கூடும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விண்கல்லை ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளேன்" எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அந்தக் கல்லை ஒப்படைப்பதற்காக ஆட்சியரைச் சந்திக்கச் சென்றார். லட்சுமி நாராயணனால் 5 கிலோ எடையுள்ள கல்லை நீண்ட நேரம் சுமந்து கொண்டு நிற்க முடியவில்லை.

அவருக்கு முன்னால் வரிசையில் நின்றிருந்தவர்கள் அதிகம் பேர் இருந்ததால், லட்சுமி நாராயணனால் ஆட்சியரைச் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து அவர் அந்தக் கல்லை ஒப்படைக்காமல் திரும்பிச்சென்றார். வேறொரு நாள் வந்து ஆட்சியரை சந்திந்து விண்கல்லை ஒப்படைக்கப் போவதாக அவர் தெரிவித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in