கைக் கடிகாரம் கட்டி வந்ததால் மாணவரின் கையில் வெட்டு: 7 மாணவர்கள் மீது வழக்கு

கைக் கடிகாரம் கட்டி வந்ததால் மாணவரின் கையில் வெட்டு: 7 மாணவர்கள் மீது வழக்கு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பள்ளபட்டி சாலையில் உள்ள திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த பரஞ்சோதி மகன் ரமேஷ் (17). திருத்தங்கலில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ரமேஷ் புதன்கிழமை பள்ளிக்குச் சென்றபோது புதி தாக கைக்கடிகாரம் அணிந்து சென்றுள்ளார். இதைப்பார்த்த சக மாணவர்கள் சிலர் ரமேஷை கேலி செய்துள்ளனர். இதுதொடர்பாக ரமேஷுக்கும் சில மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு திருத்தங்கல் கடை வீதியில் சென்றுகொண்டிருந்த மாணவர் ரமேஷை, பள்ளியில் அவருடன் தகராறு செய்த சில மாணவர்கள் அழைத்துப் பேசியுள்ளனர். பின்னர், ரமேஷை அவர்கள் திருத்தங்கல் ரயில் நிலையத்துக்குள் அழைத்துச் சென்று, தங்களிடம் இருந்த ஆயுதங்களால் ரமேஷைத் தாக்கியுள்ளனர்.

இதனால் அவரது இரு கைகளிலும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. வலிதாங்க முடியாமல் ரமேஷ் அலறியதால் அவரை விட்டுவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

இதுபற்றித் தகவல் அறிந்த ரயில்வே போலீஸார், மாணவர் ரமேஷை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ரமேஷை தாக்கியதாக சக மாணவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாக உள்ள 7 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in