

இலங்கை நெடுந்தீவு அருகே செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரையும், செப்டம்பர் 16 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
40 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ராமேசுவரம் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. இதனால் வேலை நிறுத்தத்தை கைவிட்டு, மீண்டும் திங்கட்கிழமை 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இதில் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின்பேரில் 9 மீனவர்களை அந்நாட்டு கடற்படை அதிரடியாகக் கைதுசெய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விசாரித்த நீதிபதி லெனின்குமார், 8 மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையிலும், 14 வயது சிறுவன் மரியராஜை மட்டும் யாழ்பாணம் சிறுவர் சீர்திருத்தச் சாலையிலும் செப்டம்பர் 16 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழில் இயக்குநரிடம் கூறியதாவது:
‘’ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து திங்கட்கிழமை 2 படகுகளில் 9 மீனவர்கள் புறப்பட்டோம். நாங்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரவில்லை. திசை மாறியே வந்தோம். இலங்கை கடற்படையினர் எங்களின் ஒரு படகில் மோதி மூழ்கடித்துவிட்டனர். இதனால் அந்த படகில் இருந்த 5 பேரும், மற்றொரு படகில் ஏறி தப்பினோம். பின்னர் எங்களை கைது செய்தனர். இதில் 14 வயது சிறுவன் மரியராஜ், 4ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவரது தந்தை சகாயராஜ் இறந்துவிட்டதால், இச்சிறுவன்தான் கடலுக்குப் போய் குடும்பத்தை காப்பாற்றி வருகிறான்’’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் தமிழக மீனவர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டனர்.