

ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொருத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை பொருத்துவது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
2014-ல் சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் முன்பு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை அமல்படுத்தக்கோரி ராஹத் பாதுகாப்பு சமுதாய அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் சுரேந்தர் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் பயணிகள் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாகவும், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை தொடர்வதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதம் தள்ளிவைத்தனர்.