

சில அறிவுகெட்ட முட்டாள்கள் நதிகளை இணைப்பதாக சொல்கின்றனர் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என கூறியுள்ளது. இதனை சமீபத்தில் ரஜினிகாந்த் வரவேற்றுப் பேசினார்.
இந்நிலையில், கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று (வியாழக்கிழமை) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
"இங்கு சில முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல 'இடியட்ஸ்' பேசிக்கொண்டு அலைகின்றனர். ஏரியை, குளத்தை என் தாத்தன் வெட்டினான். கம்மாயை என் பாட்டன், முப்பாட்டன் வெட்டினான். கிணறு, ஊருணியை வெட்டினான்.
ஆற்றை நாங்கள் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெருங்கொடை. அருவி தானாக பாதை கண்டு ஓடியது. எங்கே மேடு, எங்கு பள்ளம், வளைவு, நெளிவு என அதுவே உருவாக்கியது ஆறு. அதை எப்படி இணைப்பீர்கள்?"
இவ்வாறு சீமான் பேசினார்.
ஏற்கெனவே ரஜினிக்கு சொந்தமாக சிந்திக்க மூளை இல்லை, அவருக்கு மோடி தான் இயக்குநர் என சீமான் விமர்சித்தார்.