

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பாக 15 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம் கிளைக் கழகச் செயலாளர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஒன்றிய விவசாயப் பிரிவுப் பொருளாளர் முதலான பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய ஆரம்பகால கழக உடன்பிறப்பும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியுமான, மறைந்த சூ. மாரிமுத்துவின் மகள் கோமதி, கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகளப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சிறு வயது முதல் தடகள விளையாட்டில் ஆர்வம் மிக்க கோமதி மாரிமுத்துவின் தேசிய அளவிலான சாதனையைப் பாராட்டி, ஜெயலலிதா 13.9.2012 அன்று ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ஊக்கத் தொகையாக 25,000 ரூபாயை மாவட்ட நிர்வாக நல நிதியிலிருந்து வழங்கி ஊக்கப்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் கருணையாலும், நல்லாசியோடு செயல்பட்டு வரும் கழக அரசின் முயற்சியாலும், கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள கோமதி மாரிமுத்துவை நேரில் வரவழைத்து, முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இன்று கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை வழங்கி வாழ்த்து கூறியதோடு, கோமதியின் அவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
கழகத்தின் சார்பில் வழங்கப்பட்ட உதவியை பெற்றுக்கொண்ட கோமதி மாரிமுத்து, தான், ஆசிய தடகளப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வெல்வதற்குக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கும், ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றியை நெஞ்சம் நெகிழ தெரிவித்துக் கொண்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.