மகள் திருமணத்துக்காக 6 மாத பரோல்: தானே வாதிட நளினி ஆட்கொணர்வு மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மகள் திருமணத்துக்காக 6 மாத பரோல்: தானே வாதிட நளினி ஆட்கொணர்வு மனு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

6 மாத பரோல் கேட்டுள்ள நளினி, அந்த வழக்கில் தானே ஆஜராகி வாதாட விரும்புவதால் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்குத் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத பரோல் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 

தனது ஆட்கொணர்வு மனுவில் நளினி கூறியிருப்பதாவது:

''27 ஆண்டுகளாக நான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும்  ஒரு மாத பரோல்  கூட எனக்கு வழங்கப்பட வில்லை.

என்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000-ம் ஆண்டுக்குp பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,700  கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்னை விடுவிக்கவில்லை.

20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட , ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி என்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளேன், என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் எழுவரையும் விடுவிக்கக் கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தன் தாத்தா பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் என் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் எனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டும் என வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் நான் அளித்த மனு நிலுவையில் உள்ளது.

அதேபோல என் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த இரண்டு மனுக்களும் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு ஆறு மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கில் நானே ஆஜராகி வாதாட விரும்புவதால் என்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு நளினி ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் அமர்வு முன்  விசாரணைக்கு வந்தது. நளினி தானே ஆஜராகி வாதிடும் வகையில் தன்னை ஆஜர்படுத்தக் கோரி அவர் தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர், சிறைத் துறை டிஜிபி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு வழக்கை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

மேலும், முன்கூட்டியே நளினிக்குப் பரோல் தேவைப்படுவதாக கருதினால் கோடை விடுமுறை கால அமர்வை அவர் அணுகலாம் என்றும் நளினிக்கு அறிவுறுத்தினர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in