

என்னால் மாடு பிடிக்க முடியாது; 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்றெல்லாம் சொல்லாதீர்கள் என்று பிரச்சாரக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச கூட்டத்தில் இருந்தவர்கள் கைதட்டி சிரித்து மகிழ்ந்தனர்.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நேற்று (திங்கள்கிழமை) பிரச்சாரம் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அப்போது மாவட்ட அதிமுகவினர் அவருக்கு ஜல்லிக்கட்டு நாயகன் என பட்டமளிக்க விருப்பம் தெரிவித்தனர். 2017-ல் ஜல்லிக்கட்டு நடக்க அப்போது முதல்வராக இருந்த ஓபிஎஸ்தான் காரணம் எனக் கூறி அவர்கள் ஜல்லிக்கட்டு நாயகன் பட்டத்தை வழங்க விரும்புவதாகக் கூறினர்.
ஆனால், லாவகமாக அந்தப் பட்டத்தை ஏற்க மறுத்த ஓபிஎஸ், "ஜல்லிக்கட்டு நாயகன் பட்டமெல்லாம் வேண்டாம் ஒருவேளை யாராவது அந்தப் பட்டத்துக்கு நீங்கள் தகுதியானவர்தானா மாட்டை அடக்கிக் காட்டுங்கள் என்றால் என்னால் முடியாது" என்று தட்டிக்கழித்தார்.
அதுமட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் நடைபெற பிரதமர் மோடியே காரணம். தடையை நீக்க கிட்டத்தட்ட 4 அமைச்சரவைகள் தடையை நீக்கக் காரணமாக இருந்தவர் மோடி என்று புகழ்ந்து தள்ளினார்.
வருகிற 13-ம் தேதி தேனியில் அதிமுக வேட்பாளரும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.