வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுகவினர் திட்டம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
Updated on
1 min read

தமிழகம் முழுதும் உள்ள வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக அதன் கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக திமுக சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹுவிடம் புகார் ஒன்றை அளித்தார். அந்தப்புகாரில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கிய காலை முதலே வாக்காளர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெருந்திரளாக வாக்களித்து வருவதை ஆளுங்கட்சியினரால்  பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதனால் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாலை 3 மணிக்கு மேல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளை கைப்பற்றிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இதற்கு காவல்துறையினரும் ஒத்துழைப்பு தரும் வகையில் காவல்துறையின் பாதுகாப்பினை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்குச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அந்த நேரத்தில் செயலிழக்க செய்ய போவதாகவும் தகவல் வந்துள்ளது.

இதன் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக இதை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும் நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கிரிராஜன் அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in