

மோடியைக் கட்டியணைத்தது ஏன் என்ற கேள்விக்கு, அன்பின் வழியாக ஆத்திரத்தைக் குறைக்க முயன்றேன் என்றார் ராகுல் காந்தி.
தமிழகத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல் காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது மாணவி ஒருவர், எதற்காக பிரதமர் மோடியைக் கட்டியணைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ராகுல், ''அனைத்து மதங்களுக்கும் அன்பே அடிநாதம். இந்து மதம், கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கியம், புத்தம், சமணம் அனைத்துக்கும் இது பொருந்தும்.
நான் நாடாளுமன்ற அவையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.எனக்கு அவரின் மீது எந்தக் கோபமும் இல்லை. அவரின் மீது எவ்விதமான வெறுப்பையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர் மிகுந்த கோபத்துடன் இருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது.
நானோ, காங்கிரஸ் கட்சியோ எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறிக்கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு இழிவானவர்கள், என்னுடைய தந்தை மோசமான நபர், என்னுடைய தாய் பயங்கரமானவர், என் பாட்டி என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. ஆனால் எனக்குள் மோடி மீது அன்பு இருந்தது.
கோபத்தில் இருந்த அந்த மனிதரால் உலகின் அழகை உணர முடியவில்லை. குறைந்தபட்சம் என்னுடைய பங்காக அவர் மீது அன்பை வெளிப்படுத்த முடிவுசெய்தேன். கட்டியணைத்தேன்.
மற்றவர்கள் மீது அன்பு செலுத்தாத நபர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதற்கான காரணம் அவர்கள் மீது யாரும் அன்பு செலுத்தி இருக்க மாட்டார்கள். அதனால் அன்பு மூலமாக ஆத்திரத்தைக் குறைக்க முடிவெடுத்து, செயல்படுத்தினேன்.
உங்களுக்குப் பாடம் கற்றுத் தருபவர்களை உங்களால் வெறுக்க முடியுமா என்ன?'' என்றார் ராகுல் காந்தி.