

துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்ததன் பின்னணி குறித்து அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய அளவில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் இதற்கு கண்டனத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சென்னை அதிமுக கூட்டணி வேட்பாளர் சாம் பாலை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:
ப்ளூ ஸ்கை ஆபரேஷன் என்ற பெயரில், திமுக போட்டியிட்டும் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ100 கோடி விதம் செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். 20 தொகுதிக்கு மொத்தம் ரூ.2000 கோடி செலவு செய்து மக்களை விலைக்கு வாங்க திட்டமிட்டனர். இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்ததை வைத்தே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று இருக்கலாம். இதற்கு ஏன் பயப்பட வேண்டும்?
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.