

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த மாவட்டங்களில் 15,95,922 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் மொத்தம் 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 5,47,393 பேர், பெண்கள் 5,79,346 பேர், மூன்றாம் பாலினத்தவர் 185 பேர். மாவட்டம் முழுவதும் 2,74,274 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக ஆலந்தூர் தொகுதியில் 1.32 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் வசதிக்காக புதிதாக 144 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,401-லிருந்து 1,545-ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா வெளியிட்டார். இதன்படி, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 491 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் ஆண்கள் 10,22,756 பேர், பெண்கள் 10,62,381 பேர், மூன்றாம் பாலினத்தவர் 354 பேர். வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 7 லட்சத்து 1,871 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டார். மொத்தம் 6,19,777 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 1,09,499 பெயர்களும், மதுரவாயல் தொகுதியில் 1,17,368 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் தற்போது 29,62,449 வாக்காளர்கள் உள்ளனர்.