Published : 18 Feb 2019 04:18 PM
Last Updated : 18 Feb 2019 04:18 PM

விதிமீறல் பேனர்கள்: அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பறக்கிறார்களா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

சாலையில் வைக்கப்பட்டுள்ள விதி மீறிய பேனர்களை அகற்றாமல், அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பறக்கிறார்களா என சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவையில் ஆர்.எஸ் புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோரை வரவேற்க கடந்த ஒரு வாரமாக விதிகள் மீறி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி இன்று (திங்கள்கிழமை) முறையிட்டார்.

முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வு, விதிகளை மீறிய பேனர்களை அகற்ற கடந்த 8 வருடங்களுக்கு முன்பே நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதை அரசு இதுவரை அமல்படுத்தவில்லை என கடும் கண்டனம் தெரிவித்தனர்.

விதி மீறிய பேனர் விவகாரத்தில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்டால் தான் அரசு செயல்படுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விதிகள் மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என தெரிவித்தனர்.

இதுதொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பினால், கேட்டுச் சொல்வதாக தெரிவிப்பதற்கு எதற்கு அரசு வழக்கறிஞர்களுக்கு ஊதியம் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

விதிமீறல் பேனர்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் கால அவகாசம் வாங்கிக்கொண்டே இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்கிறது. அந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தைத் தூண்டுகிறது அரசு என நீதிபதிகள் எச்சரித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் தான் தண்டனை. ஆனால் நீதிபதிகள் நேரடியாக நடவடிக்கை எடுக்க அளவில்லா அதிகாரம் இருப்பதாகவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

விதிமீறல் பேனர்களை ஒரு வாரமாக அகற்றவில்லை என்றால் அரசு அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா? அல்லது ஹெலிகாப்டரில் பறக்கிறார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிராபிக் ராமசாமி முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x