

குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தெரிவிக்க, மாற்றம் செய்ய சென்னையில் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்புமுகாம் நடக்கிறது.
இது குறித்த தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணும் பொருட்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜனவரி 19 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொது மக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 17 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.