

ஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவுத் துறை ஐஜி குமரகுருபரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
பத்திரப் பதிவுத் துறையில் ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய பதிவுத் துறைக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பதிவுத் துறை ஐஜி குமரகுருபரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ‘‘பத்திரப்பதிவுத் துறையில் சேவைகளை எளிமைப்படுத்தவும், ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும், ஆவணங்களை மோசடியாக திருத் துவது மற்றும் ஊழலை ஒழிக்க 2.0 என்ற இணைய மென்பொருள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 2019 ஜன. 23 வரை 20 லட்சத்து 19 ஆயிரத்து 403 பத்திரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மின்னணு முத்திரைத்தாள் வசதியை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை பதிவு செய்தவுடன் மனுதாரருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டத்தைத் தடுக்க விற்பனை செய்பவரின் கைரேகையை சரிபார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆதாருக்காக பெறப்பட்ட பயோ-மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 2,725 கருவிகளை கொள்முதல் செய்ய ரூ.2.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிலங்களை போலியாக பத்திரப்பதிவு செய்வதைத் தடுக்க வருவாய்த் துறையின் ‘தமிழ் நிலம்’ என்னும் செயலி, பத்திரப்பதிவுக்கான மென்பொருளுடன் இணைக்கப் பட்டுள்ளது. மேலும், பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்த வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.ஆள்மாறாட்டத்தைத் தடுக்க விற்பனை செய்பவரின் கைரேகையை சரிபார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆதாருக்காக பெறப்பட்ட பயோ-மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.