திருமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து பாஜக தொண்டர்கள் 7 பேர் காயம்:  அரசு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

திருமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து பாஜக தொண்டர்கள் 7 பேர் காயம்:  அரசு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்
Updated on
1 min read

திருமங்கலம் அருகே வேன் கவிழ்ந்ததில் பாஜக தொண்டர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். காயம் அடைந்த தொண்டர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவியும் வழங்கினார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் பொதுக்கூட்டம் முடிந்து நேற்று பிற்பகல் வேன்களில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் சென்னிவளம் கிராமத்தைச் சேர்ந்த தொண்டர்கள் மதுரை ரிங்ரோடு-திருமங்கலம் சாலையில் வந்தபோது வேன் நிலைதடுமாறி கரிவேலம்பட்டி விலக்கு அருகே உள்ள வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 108 ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ.50ஆயிரம் நிதி உதவி செய்தார். திருமங்கலம் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in