

சென்னை: பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு தமிழகத்திலிருந்து திருப்பதிக்கு நாளை முதல் செப்.30 வரை தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு திருப்பதி திருமலையில் பிரம்மோத்ஸவத் திருவிழா நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தாம்பரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கும், திருப்பதியிலிருந்து மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும் நாளை முதல் செப்.30 வரை பக்தர்களின் தேவைக்கேற்ப தினமும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், செங்கோட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பக்தர்கள் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.