அந்நியச் செலாவணி மோசடி வழக்கு; காணொலி காட்சி மூலம் ஆஜரான சசிகலா மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு; காணொலி காட்சி மூலம் ஆஜரான சசிகலா மீது மீண்டும் குற்றச்சாட்டு பதிவு
Updated on
1 min read

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், பெங்களூரு சிறையில் இருந்தபடி காணொலிக் காட்சியில் ஆஜரான சசிகலா மீது, எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.

ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடி நடந்தது தொடர்பாக வி.கே.சசிகலா, பாஸ் கரன் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த 1996-97ம் ஆண்டுகளில் 4 வழக்கு களை பதிவு செய்தனர். சென்னை எழும்பூ ரில் உள்ள பொருளாதார குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

பாஸ்கரன் மீது கடந்த ஆண்டு ஜூலையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மீது காணொலிக் காட்சி மூலமாக ஏற்கெனவே குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதுதொடர்பான ஆவணங்களில் அவர் கையெழுத்திடவில்லை.

இதனால், மறு குற்றச்சாட்டு பதிவுக்காக சசிகலாவை டிசம்பர் 13-ம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு பெங்களூரு சிறை நிர்வாகத்துக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், ‘சசிகலாவிடம் காணொலிக் காட்சி மூலமாகவே குற்றச்சாட்டை பதிவு செய்யலாம். இந்த வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதன்படி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாகவே நேற்று மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதற்காக, பெங்களூரு சிறை வளாகத்தில் நீல நிற சேலை, மஞ்சள் நிற சால்வையுடன் காணொலிக் காட்சியில் சசிகலா ஆஜரானார்.

எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்தபடி நீதிபதி மலர்மதி விசாரணை நடத்தி குற்றச்சாட்டை பதிவு செய்தார். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை சசிகலா மறுத்தார்.

அந்நியச் செலாவணி மோசடி தொடர் பாக சசிகலா மீதான 4 வழக்குகளில், 2 வழக்குகளில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. எஞ்சிய 2 வழக்குகளின் குற்றச்சாட்டு பதிவுக்காக விசாரணையை நீதிபதி வரும் ஜனவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in