

பெரியாரின் நினைவு நாளான இன்று, மக்கள் விரோத சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியச் சமூகத்தில் காலம் காலமாக புரையோடிக் கிடக்கும் சாதியமைப்புக்கு அடித்தளமாக அமைந்திருப்பது சனாதனம் என்னும் மனுஸ்மிருதி அல்லது வருணாசிரமக் கோட்பாடே ஆகும். அதுவே இந்திய மக்களை ஆயிரக்கணக்கான சாதிக்குழுக்களாகப் பிரித்து, உயர்வு - தாழ்வைக் கற்பித்து நெடுங்காலமாக அதனை நிலைப்படுத்தியுள்ளது.
இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மிக மோசமான இழிவுகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். உலகின் வேறெந்த மூலையிலும் இல்லாத இத்தகைய சனாதன-சாதியமைப்பு முறையை எதிர்த்து கவுதம புத்தர் காலத்திலிருந்தே போராடிக் கொண்டிருக்கிறோம்.
புரட்சிகரமான அப்போராட்டக் களத்தில் இருபதாம் நூற்றாண்டின் எழுச்சிமிகு போராளிகளாக முன்னின்று எளிய மக்களை வழிநடத்திய மாமனிதர்களுள் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகிய இருவரும் முதன்மையானவர்கள் ஆவர். இத்தகு பெருமைக்குரிய பெரியாரின் நினைவு நாளான இன்று, அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டியது ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் உரிய கடமையாகும். அத்தகைய கடமையுணர்வோடு பெரியாருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
பெரியர், தனது இறுதி மூச்சுவரையில் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், சாதிய வன்கொடுமைகளுக்குக் காரணமான சாதியமைப்பு முறையையும் அதற்கு அடிப்படைக் காரணியாகவுள்ள சனாதனம் என்னும் மனுதரும கோட்பாட்டையும் மூர்க்கமாக எதிர்த்துப் போராடியவர் ஆவார். சாதி ஒழிப்பிலிருந்தே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆகவேதான் சாதியமைப்பின் அடித்தளமான சனாதனத்தை வேரறுக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டி, நீண்ட நெடும்போரை சலிப்பின்றி நடத்தினார்.
அவர் வழியில் இன்னும் அந்த அறப்போரை நாம் தொடர வேண்டியுள்ளது. சமூக நீதி என்னும் இடப்பங்கீடு உரிமைக்கான தொடர் போராட்டம்தான் பெரியார் சனாதனத்துக்கு எதிராகக் கையாண்ட வலுவானதொரு அரசியல் ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை இன்னும் நமது தலைமுறையிலும் தொடர்ச்சியாகக் கையேந்த வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையில், சனாதனமென்னும் பெருமலையைத் தகர்க்கும் உளியும் ஆப்பும் ஓங்கி அடிக்கும் சம்மட்டியும் சமூக நீதியே என்பதை உணர்ந்து அதனைக் கையேந்துவதுதான் பெரியாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இதுவே சமத்துவத்துக்காகப் போராடும் ஒவ்வொருவரும் அவரது நினைவு நாளில் ஏற்கவேண்டிய உறுதிமொழியாகும். எனவே, சமூக நீதியை வென்றெடுப்போம்; சனாதனத்தை வேரறுப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.