

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து கடந்த ஜூன் 25-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இ - பேக்ஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவர்களது மனுவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, மக்கக் கூடிய பாலி ப்ரொபைலின் பைகளுக்கும் சேர்த்து அரசு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மருத்துவம் மற்றும் தொழில் பயன்பாட்டுக்கு இந்த வகை பைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் இந்த பாலி ப்ரொபைலின் பைகளை பயன்படுத்த தடை விதிக்கக்கூடாது என்றும், இந்த வகை பைகளை உற்பத்தி செய்யும் தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிட தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளிவைத்தது.