

குன்னூரில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை, பொதுமக்கள் கூடியதால் கம்பியை பிய்த்துக்கொண்டு ஒட்டமெடுத்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை பகுதியில் 3 வயதுள்ள சிறுத்தை ஒன்று கம்பியில் சிக்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர்.
மேலும் வேலி கம்பியில் சிறுத்தையின் கால் சிக்கி வேலியின் மேல் புறத்தில் சிமெண்ட் கம்பத்தில் நின்று தவித்துக்கொண்டிருந்தது.வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்க முயற்சி செய்தனர். பொதுமக்கள் கூடியதால் 1 மணிநேரம் தவித்த சிறுத்தை கம்பியை பிய்த்துக்கொண்டு தேயிலை தோட்டத்திற்குள் ஒடி மறைந்தது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் சிறுத்தையை கண்காணிக்க வேண்டும் என தேயிலை தோட்ட தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.