பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- அரசாணைக்கு எதிரான வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை- அரசாணைக்கு எதிரான வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்குகளில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை அந்த வழக்குகளை விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு ஜூன் 5-ம் தேதி பேரவை 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான குழு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்ற பொருட்களைத் தடை செய்யவும், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் ஆலோசனை வழங்கியதன் அடிப்படையில் ஜூன் 25-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் நிலங்களில் மக்காமல் தங்கிவிடுவது,  நீரின் போக்கு மாறிவிடுவது, கழிவுநீர் செல்லும் பாதைகளில் அடைப்பு ஏற்படுத்துவது என நிலத்தடி நீர் மற்றும் நிலம் மாசடைவதுடன் நோய்களும் பரவுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இ-பேக்ஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, மக்கக் கூடிய பாலி ப்ரொபைலின் பைகளுக்கும் சேர்த்து அரசு தடை விதித்துள்ளதாகவும், பல்வேறு மருத்துவ மற்றும் தொழில் பயன்பாட்டுக்கு உகந்த பைகளுக்கு விலக்களிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் சட்டத்தின் விதிகளைக் கடைப்பிடித்து அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும், பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்த தமிழக அரசுக்கு தன்னிச்சையாக அதிகாரம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசு அறிவியல் அல்லது தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அரசாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 மைக்ரான்களுக்குக் குறைவான தடிமம் கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்குத்தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவில், எத்தனை மைக்ரான்களுக்குக் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் எதுவும் இல்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in