சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரு நாட்களுக்கு கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரு நாட்களுக்கு கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
Updated on
1 min read

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது:

''கஜா புயல் பாதித்த டெல்டா பகுதியில் இருந்து மேகக்கூட்டங்கள் ஒட்டுமொத்தமாக வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புயல் வரும் என்ற அச்சம் தேவையில்லை. அதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த காற்றழுத்தழுத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் தீவிரமடையக்கூடும். இதன் காரணமாக, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மிகக் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் (21-ம்தேதி), நாளையும் (22-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அதிகமான அளவு மழையைப் பெறாது.

23-ம் தேதி வேண்டுமானால், மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், அச்சுறுத்தும் வகையில் மழை ஏதும் இல்லை. ஆதலால் டெல்டா பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் கனமழை பெய்யும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி முதல் காரைக்கால் வரை நிலப்பகுதியை நாளை கடக்கும்போது, கடலூர், புதுச்சேரியில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வரையில் காற்று வீசக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும், நாளையும் கனமழை இடைவெளிவிட்டுப் பெய்யக்கூடும். இந்த இருநாட்கள் மழை பெய்யாவிட்டால், வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது என்று கூட எடுத்துக்கொள்ளலாம். அடுத்துவரும் இரு நாட்கள் மழை சென்னைக்கு மிகவும் முக்கியமானதாகும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒட்டுமொத்தமாக மேற்கு நோக்கி நகர்ந்து,நிலப்பகுதியைக் கடக்கும் போது வடதமிழக மாவட்டங்களை நோக்கி மேகக்கூட்டம் நகரும்''.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in