புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ‘நெல் ஜெயராமனுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் நேரில் வழங்கினார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ‘நெல் ஜெயராமனுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஸ்டாலின் நேரில் வழங்கினார்
Updated on
1 min read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ‘நெல்' ஜெயராமனுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில், "திமுக அறக்கட்டளையின் சார்பில் அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த 'நெல்' ஜெயராமன் மருத்துவ உதவி நிதியாக ரூபாய் 1 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜெயராமன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால், 'நெல் ஜெயராமன்' எனப் பெயர் சூட்டி அழைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாகப் பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

நெல் ஜெயராமனை இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, அவரது மருத்துவச் செலவுக்காக திமுக அறக்கட்டளையின் சார்பில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். அப்போது திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மருத்துவர் எழிலன் ஆகியோர் உடனிருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in