

திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் அவதிப்பட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலையில் காலமானார். இதையடுத்து, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் நேற்று முன்தினம் மாலையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று பேருந்துகளின் சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டன. பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.
சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ள முக்கிய பேருந்து நிலை யங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன. வழக்கமாக மாலை யில் இயக்க வேண்டிய ஆம்னி பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால், பயணிகள் அவதிப்பட்டனர். ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்தனர்.
இதனால், தவிர்க்க முடியாத சூழலில் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள், ரயில்களில் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, விரைவு மற்றும் மின்சார ரயில்களின் சேவையில் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் ஓடின. இந்த ரயில்களின் சேவை பயணிகளுக்கு ஆறுதலாக இருந்தது.
இருப்பினும், திமுக தொண்டர்கள் சொந்த வாகனங்கள் மூலமும், வேன் போன்ற இதர வாடகை வாகனங்கள் மூலம் சென்னைக்கு வந்தனர்.
இதுதொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, அரசு பேருந்துகள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும்’’ என்றார்.