நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு 

நெல்லை கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு 
Updated on
1 min read

மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான சார்பு ஆய்வாளர் ஜாமீன் மனு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் காதல் விவகாரம் காரணமாக ஜூலை 27-ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கவின் காதலித்து வந்த இளம் பெண்ணின் தம்பி சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பெண்ணின் தாயாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதில் சரவணன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதில், “சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும், இந்த வழக்கில் எனக்கு இல்லை.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 30-ஆம் தேதியிலிருந்து சுமார் 98 நாட்கள் சிறையில் இருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கே. முரளி சங்கர், முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கொல்லப்பட்ட கவினின் தாயார் தமிழ் செல்வி சார்பில் சரவணனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவம்பர் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in