

காரைக்குடி: தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை காப்பாற்ற திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கின்றன என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: டெல்லியில் கார் குண்டு வெடிப்பு என்பது, பாஜக ஆட்சியில் 11 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே நடைபெற்ற முதல் சம்பவம். நாட்டு நலனில் அக்கறையற்ற திமுக, விசிக போன்ற கட்சிகள், வாக்குகளுக்காக தவறான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த 2,900 கிலோ வெடிபொருட்கள் வெடித்திருந்தால் என்னவாகி இருக்கும்? வெடி பொருள்களுடன் பயங்கரவாதிகளை கைது செய்ததன் மூலம் லட்சக்கணக்கான மக்களை பிரதமர் மோடியும், மத்திய உளவுத் துறையினரும் காப்பாற்றியுள்ளனர். ஆனால், மத்திய அரசை குறை கூறி, திமுக, விசிக போன்ற கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகின்றன.
பயங்கரவாதிகளிடமிருந்து ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் 363 கிலோ கிடைத்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளிநாட்டு சதி இருக்க வாய்ப்புள்ளது. தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவோரை காப்பாற்றத்தான் திமுக கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தபோது பயங்கரவாத சம்பவங்கள் இல்லை. அங்கு புதிய அரசு அமைந்த பிறகுதான் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவில் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் பயங்கரவாதிகளாக உள்ளனர் என்பது தொடர்பாக ப.சிதம்பரம் பதில் கூற வேண்டும்.
தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர பணிக்கான படிவங்களை திமுகவினர் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். தோல்வி பயத்தால் சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக எதிர்க்கிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.