

மறைமலை நகர்: பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ல் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 27 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், ‘வழக்கு விசாரணையை தமிழக போலீஸ் நியாயமாக மேற்கொள்ளவில்லை. எனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்’ என கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி தமிழக போலீஸுக்கு உத்தரவிட்டது. ஆனால் இன்னும் சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை பின்னணியில் யார் இருக்கிறார்கள்? சிபிஐ விசாரணைக்கு குறுக்கீடு ஏன்? நீதி கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மறைமலை நகர் பாவேந்தர் சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி நிர்வாகி ஜெயந்தி தலைமை தாங்கினார். ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.