

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சம்பத் குமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி சம்பத்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக தோனி, கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, சம்பத்குமார் தாக்கல் செய்திருந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் சம்பத்குமார் மேல்முறையீடு செய்திருந்தார்.
மனுவை ஏற்க மறுப்பு: இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தோனியின் வழக்கை நிராகரிக்கக் கோரி, மனுதாரரான சம்பத் குமார் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.