

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 45,500 கனஅடியாகவும், நேற்று மதியம் 30,500 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து மாலை 25,500 கன அடியாக குறைந்தது. எனவே, அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் 45,000 கனஅடியில் இருந்து நேற்று மதியம் 30,000 கனஅடியாகவும், மாலை 25,000 கன அடியாகவும் குறைக்கப்பட்டது.
அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 2,500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.