

ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்தினர்.
அப்துல் கலாமின் 94-வது பிறந்த தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாமின் தேசிய நினைவகம் வண்ண மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதீன், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஆவுல்மீரா, முத்துமீரா மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். இதில், அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கோட்டாட்சியர் ஹபிபூர் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர்.
நேற்று பிற்பகல் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.