வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை காலை கரையை கடக்கக்கூடும்.

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.27) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். செப்.28 முதல் அக்.2 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து ஆகிய இடங்களில் தலா 18 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 17 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் சுளக்கோடுவில் 16 செமீ, சிற்றாறில் 15 செமீ, அடையாமடை, கீழ் கோதையார், குழித்துறை ஆகிய இடங்களில் தலா 14 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in