

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு Z+ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் வரும் ஜூலை 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான பாடல் மற்றும் லோகாவை இன்று இபிஎஸ் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் இபிஎஸ். இந்தச் சூழலில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்பில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் இடம் பெறுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அடிக்கடி வரும் வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.