அஜித்குமார் வழக்கு: உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை

திருப்புவனத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி ஜான்சுந்தரால் சுரேஷ்.
திருப்புவனத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரணை நடத்திய மாவட்ட நீதிபதி ஜான்சுந்தரால் சுரேஷ்.
Updated on
1 min read

திருப்புவனம்: போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை நடத்தினார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கை நேற்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை விசாரித்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினரிடமும், அரசிடமும் சரமாரியாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

மேலும் இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்று திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து வருகிறார்.

சகோதரருக்கு அரசு வேலை, குடும்பத்துக்கு இலவச வீட்டு மனை: முன்னதாக இன்று காலை, அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

அஜித்குமாரின் தாயார், சகோதரர் ஆகியோரை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களிடம் தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று முதல்வரின் உத்தரவுபடி, அஜித்குமார் தாயார் மாலதியை, அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 3 சென்ட் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். மேலும், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு ஆவின் நிர்வாகத்தில் டெக்னீசியன் பணிக்கான ஆணையும், திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியையும் வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, தமிழரசி எம்எல்ஏ, கோட்டாட்சியர் விஜயகுமார், பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in