Published : 01 Jul 2025 04:04 PM
Last Updated : 01 Jul 2025 04:04 PM

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”பாஜக மத்திய அரசு அறிவித்த ரயில் கட்டண உயர்வு ஏழை மக்களை, குறிப்பாக அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறி, அதனை திரும்பப் பெற வேண்டும் என, எதிர்க்கட்சிகள், ரயில் பயணிகள் சேவை அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு எந்த வித மாறுதலும் இல்லாமல் இன்று முதல் ஜூலை 1ம் தேதி ரயில் கட்டண உயர்வை அமலாக்கியுள்ளது.

கட்டண உயர்வை, ரூபாய் கணக்கில் கூறாமல் பைசா கணக்கில் கூறியிருப்பது பொதுமக்களை ஏமாற்றும் வஞ்சகமாகும். நாள்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் என்ற முறையில், ஆண்டுக்கு 400 கோடி பேர் பயணிக்கும் ரயில் பயணம் எத்தனை கோடி கிலோ மீட்டராக இருக்கும் என்பதை கணக்கிட முடியாமல் மறைக்கும் செயலாகும். இது தவிர முன்பதிவு முறையில் தட்கல், பிரீமியம் தட்கல், அதி விரைவு வண்டி, சிறப்புக் கட்டண சேவை என பல்வேறு வகைகளில் ரயில் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

கிலோ மீட்டருக்கு 4 பைசா வரை கட்டண உயர்வு என்பதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டண சுமையை பயணிகள் தலையில் சுமத்தியிருக்கும் மோடியின் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், அறிவிக்கப்பட்டு, அமலாக்கத் தொடங்கியுள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x