Published : 01 Jul 2025 03:52 PM
Last Updated : 01 Jul 2025 03:52 PM

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணி: அரசு அமைத்த குழுவை அணுக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிப்பது தொடர்பாக அரசு நியமித்துள்ள குழுவை அணுக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும் பட்சத்தில் 10 ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவோரை அமர்த்தாமல், தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களை வைக்க தனி இடம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது 12 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்கும் நியமிப்பதால் அவர்களுக்கு பணிச்சுமை ஏற்படும்.” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சங்கம் அந்த குழுவை அணுகலாம்.” என தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, காலி பாட்டில்களை திரும்ப பெரும் பணிக்கு தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அரசு நியமித்துள்ள குழுவை அணுகும்படி மனுதாரர் சங்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x