

தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் 67,68,69,70 ஆகிய வார்டுகளில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு நிலைய இயந்திரத்தை சரி செய்து தடையின்றி குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் பேரூராட்சியாக இருந்த போது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. பின்னர், மாநகராட்சியாக மாற்றப்பட்டது.
தற்போது 67,68,69,70 வார்டுகள் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 10-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் பழுதானதால் மீண்டும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் குடிநீர் மாசடைந்ததால் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து மாடம்பாக்கத்தை சேர்ந்த முனிநாதன் கூறியது: மாடம்பாக்கம் பேரூராட்சியாக இருந்த போது பேரூராட்சி சார்பில் 18 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
மாநகராட்சியாக மாறிய பின் 4 வார்டுகளாக பிரிக்கப்பட்ட நிலையில், முறையாக பராமரிக்காததால் பெரும்பாலான சுத்திகரிப்பு நிலையம் பயன்படுத்தப்படாமல் பழுதாகி உள்ளது. இதில் பெரியார் நகர் 4-வது, உள்ளிட்ட சில இடங்களில் மட்டு சுத்திகரிப்பு நிலையம் இயங்குகிறது. மற்ற இடங்களில் இயங்கவில்லை.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை இல்லை. இதனால், சுத்திகரிக்கப்பட்ட (20 லிட்டர்) தண்ணீர் ரூ.30-க்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே, மக்களுக்கு பயன்படும் வகையில் பழுதான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து கொடுக் ஆணையர் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.