போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு

Published on

சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாந்த், பெங்களூரு பிரதீப் மற்றும் சப்ளை செய்ததாக கானா நாட்டைச் சேர்ந்த ஜான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கொக்கைன் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவையும், அவருக்கு போதைப்பொருளை சப்ளை செய்த கெவின் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணா எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி கிருஷ்ணா சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘எனக்கும் இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னை போலீஸார் தவறுதலாக கைது செய்துள்ளனர். நான் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கில் தொடர்புடைய எந்த போதைப் பொருட்களும் என்னிடம் இல்லை. போலீஸாரும் என்னிடமிருந்து எதையும் கைப்பற்றவில்லை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த், கெவின் உள்ளிட்ட நபர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கு உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் நான் இல்லை. பழைய வாட்ஸ்அப் குருப்பை வைத்து போலீஸார் என்னை கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும், எனக்கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசார ணைக்கு வரவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in