கட்சி கொடிக் கம்பங்களை அகற்றும் வழக்கு: கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரத்தில் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் நிரந்தர கொடிக் கம்பங்களை ஏப். 28-க்குள் அகற்றுமாறு மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, கொடிக் கம்பங்களை சம்பந்தப்பட்ட கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்துக் கொள்ளட்டும், சாலைகளில் வைக்க வேண்டாம் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். பல இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "அனைத்து அரசியல் கட்சிகளையும் வழக்கில் சேர்க்காமல், கட்சிகளின் கருத்துகளை கேட்காமல், பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டா நிலத்தில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அமைக்கவும் உரிய அனுமதி பெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் அரசிடம் முறையாக அனுமதி பெற்றே வைக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், "தனியார் இடங்களில் சிலை வைக்க அனுமதி தேவை இல்லை என நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. சிலை வைக்க அனுமதி தேவையில்லாதபோது, தனியார் இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததை ஏற்க முடியாது.

மேலும், அனைத்து அரசியல் கட்சிகளையும் வழக்கில் சேர்க்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனி நபர் நிவாரணம் கோரும் மனுக்களில் இதுபோல பொதுவான உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது. பொதுநல வழக்கில் மட்டுமே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க முடியும்.

எனினும், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு மனுவை முதன்மை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. இதனால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதே நேரத்தில், இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கைக்கு முகாந்திரம் உள்ளதாகக் கருதுகிறோம். இதனால், இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவெடுக்க, தலைமை நீதிபதிக்கு அனுப்புமாறு பதிவுத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது" என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in