நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழை: பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழை: பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் வெளியேற்றம்
Updated on
1 min read

மேட்டுப்பாளையம்: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்வதால், பில்லூர் அணையில் இருந்து 2-வது நாளாக உபரி நீர் இன்று (ஜூன் 26) பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணையின் நீர்த்தேக்க உயரம் 100 அடி. நீலகிரி மற்றும் கேரளா மலைக் காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதியாக பில்லூர் அணை கொண்டுள்ளது.

நடப்பு தென்மேற்கு பருவமழைக்காலத்தில் இரண்டு முறை பில்லூர் அணை நிரம்பியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவாக இருந்தது. இதற்கிடையே, நேற்று பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது.

இதனால் நேற்று (ஜூன் 25) காலை 87 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று (ஜூன் 25) மாலை 6 மணி நிலவரப்படி 96 அடியை எட்டியது. தொடர் மழையால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்ததால், அடுத்த சிறிது நேரத்தில் நேற்று (ஜூன் 25) இரவு 7.30 மணியளவில் பில்லூர் அணை நிரம்பியது. அதைத் தொடர்ந்து அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு, உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பில்லூர் அணை நேற்று நிரம்பியது.

இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடர்வதால், பில்லூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 26) இரண்டாவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை 9 மணி நிலவரப்படி 11,160 கனஅடி தண்ணீர் உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

உபரி நீர் வெளியேற்றத்தால் பவானி ஆற்றில் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் பவானி ஆற்றின் கரையோரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் யாரும் இறங்கவோ, பரிசல் மூலமாக கடக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in