சென்னையில் இருந்து 326 பேருடன் துபாய் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ரத்து

சென்னையில் இருந்து 326 பேருடன் துபாய் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் ரத்து
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இருந்து 326 பேருடன் துபாய் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து துபாய் செல்லும் எமிரேட் ஏர்லைன்ஸ் 312 பயணிகள் மற்றும் 14 விமான ஊழியர்களுடன் நேற்று காலை 9.50 மணிக்கு புறப்பட இருந்தது. விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்குவதற்காக, விமானம் நிற்கும் இடத்தில் இருந்து டேக்ஸி வே டி 1 பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, விமானத்தை அவசரமாக டாக்ஸி வேயில் நிறுத்திய விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் சென்று இயந்திர கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பகல் 12:00 மணி வரையில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்ய முடியவில்லை. அதனால், பகல் 12.20 மணிக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமானத்துக்குள் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மிகவும் அவசரமாக துபாய்க்கு செல்ல வேண்டிய சில பயணிகளை மட்டும், சென்னையில் இருந்து துபாய் செல்லும் வேறு விமானங்களில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in