Published : 08 Jun 2025 06:43 AM
Last Updated : 08 Jun 2025 06:43 AM
பா.ஜ.க திட்டமிட்டது போல நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதியை கொடுக்காமல், வேறு மாநிலங்களுக்கு நிதியை கொடுக்கின்றனர். இதற்கு மத்திய அமைச்சர் முருகன் பதில் தெரிவிக்க வேண்டும். தமிழக மக்களின் ரத்தம், வியர்வையை உறிஞ்சும் பாஜக அரசு பள்ளிக் கல்வி நிதி, பேரிடர் நிவாரண நிதி, தமிழக பங்களிப்பு நிதி போன்றவற்றை ஏன் கொடுக்கவில்லை? ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது.
மக்களை பதற்றத்தோடும், அச்சத்தோடும் வைத்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க நினைக்கிறது. இதற்காகத்தான் முருகன் மாநாட்டை நடத்துகின்றனர். முருகன் மாநாட்டை குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் நடத்தி இந்து கடவுள்களை சமமாக வைத்திருப்பதை காட்ட வேண்டும். வடமாநிலங்களை போல், தென் மாநிலத்தில் கலவரத்தை தூண்ட முடியுமா என அவர்கள் காத்திருக்கின்றனர்.
மறுசீரமைப்பு காரணமாக தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். பா.ஜ.க விரும்பியதை போல மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தென் மாநிலத்தின் வாக்குகளே தேவையில்லை. தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தேவை இல்லை என்ற நிலை ஏற்படும். இதற்காக திட்டமிட்டு சதி வேலையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வராததை வருவதாக, பூச்சாண்டி கட்டுவதாக, மறுசீரமைப்பு குறித்து பேசியிருக்கிறார். அப்படியானால் நாடாளுமன்றத்தில் எதற்காக ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இப்போது எம்.பி.கள் 10 நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை. எம்.பி.களின் எண்ணிக்கை உயர்ந்தால் இரண்டு நிமிடம் கூட நேரம் கிடைக்காது. இதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு புரிகின்றதா? இல்லையா? எனத் தெரியவில்லை.
மறுசீரமைப்பு பா.ஜ.க திட்டமிட்டது போல நடந்தால், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும். தென்னிந்திய பிரதிநிதித்துவம் குறைந்து போகும். வடமாநில பிரதிநிதித்துவம் உயரும். வட மாநில பிரதிநிதிகளே அனைத்தையும் முடிவு செய்து கொள்வார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். புள்ளியியல் துறை மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை மூலம் தமிழகத்தில் ஏதாவது குழப்பம் செய்யலாமா? கால் ஊன்றலாமா ? என பா.ஜ.கவினர் முயற்சி செய்து பார்க்கின்றனர். அவர்களின் எந்த திட்டமும் நிறைவேறாது. பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் தமிழ் மண்ணில் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, “சாதி வாரி கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்கு மத்திய பாஜக அரசு தள்ளிப் போட்டதில், அரசியல் சூழ்ச்சி உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT