நீட் மறுதேர்வு நடத்த கோரிய மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நீட் மறுதேர்வு நடத்த கோரிய மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மின்சார துண்டிப்பு காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியாததால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கடந்த மே 4-ம் தேதி நடைபெற்றது. 22 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ‘அன்றைய தினம் சென்னையில் கனமழை பெய்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், எங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை’ என்று கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுதிய 13 பேர், குன்றத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தேர்வு எழுதிய 2 பேர், கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர் ஒருவர் என 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

‘மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர். எனவே, மறு தேர்வு நடத்த முடியாது’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி சி.குமரப்பன் நேற்று தீர்ப்பு வழங்கினார். ‘‘மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில், மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால், அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in