Published : 04 Jun 2025 11:48 PM
Last Updated : 04 Jun 2025 11:48 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமரர் அறையில் இருந்த முதியவர் உடல் மாயமானதால், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புஜ்ஜிரெட்டி பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (64). தீராத வயிற்று வலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதியுற்று வந்த இவர், கடந்த 2-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று ராஜேந்திரன் உயிரிழந்தார்.
இதையடுத்து, ராஜேந்திரனின் உடலை பிரேத பரிசோதனை செய்து, பெற்று செல்வதற்காக திருத்தணி காவல் நிலையம் அளித்த அனுமதி கடிதத்துடன் இன்று அவரது உறவினர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது, பிரேத பரிசோதனைக்கு முன்பாக உறவினர்கள் காட்டப்பட்ட உடல், ராஜேந்திரன் உடல் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த உறவினர்கள், மாயமான ராஜேந்திரன் உடல் எங்கே என்று கேட்டு மருத்துவமனை அமரர் அறையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மருத்துவமனை அதிகாரிகள் அமரர் அறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், “எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை எல்லை சாலைத் திட்டப் பணியில், வெங்கல் அருகே விஷ்ணுவாக்கம் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்த பிஹாரை சேர்ந்த மனோஜ்மஞ்சூர் (55) என்ற ஒப்பந்த தொழிலாளி கடந்த 2-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடலுக்கு நேற்று பிரேத பரிசோதனை செய்வதற்கு பதிலாக, தவறுதலாக ராஜேந்திரனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் ராஜேந்திரனின் உடல் பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது” தெரிய வந்தது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், பிஹாருக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்து, உடலை திருப்பி கொண்டு வரும்படி தெரிவிக்கப்பட்டது. ஆகவே, முதியவர் ராஜேந்திரன் உடல் இன்று காலை வந்து சேரும் என, அவரது உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT