

ராஜபாளையம்: ராஜபாளையம் மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களிடையே கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, 15 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்குவது வழக்கம். அதன்படி மே 1-ம் தேதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி, முதல் ஆண்டுக்கு 6 பைசா அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா 4 பைசா என கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் சிறு விசைத்தறி உரிமையாளர்களும் கடந்த ஒப்பந்தம் போல் முதல் ஆண்டுக்கு 13.5 பைசா, அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா 9 பைசா கூலி உயர்வு கேட்ட நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மே 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது குறித்து விருதுநகர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் என 5 கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், 15 நாட்களாக வேலை இல்லாமல் விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மருத்துவ துணி உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் செவ்வாய்கிழமை காலை நடந்த பேச்சு வார்த்தையில் 2022 ஒப்பந்தப்படி கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 15 நாட்களாக தொடர்ந்து வந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால் விசைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.