

சென்னை: ‘நெல் கொள்முதலில் முறைகேடு-தனியார் நிறுவனத்துக்கு தமிழக அரசு துணை போகலாமா?’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பி.ஆர். பாண்டியன் எழுதிய கட்டுரை நேற்று (திங்கள்) வெளியாகி இருந்தது.
இந்நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு 10 நாட்களில் பணம் வழங்கப்படும் அரசு உறுதியை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்மேலாண் இயக்குநர் அலுவலகத்தை இன்று (செவ்வாய்) முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்திருந்தது.
முன்னதாக, அக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகளுடன் டிஎன்சிஎஸ்சி மேலாண் இயக்குர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று டிஎன்சிஎஸ்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு 10 நாட்களுக்குள் அனைவருக்கும் பணம் வழங்கப்படும். கொள்முதலில் தனியாரை அனுமதிப்பதில்லை என அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உணவுத்துறை மற்றும் டிஎன்சிஎஸ்சி அதிகாரிகள் உறுதியளித்ததன் அடிப்படையில், முற்றுகை போராட்டத்தை தள்ளிவைக்கிறோம்'' என்றார்.