

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 9-வது நிர்வாககுழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதில் பங்கேற்கிறார்.
இதையொட்டி, சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் நேற்று காலை 9.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில், அமைச்சர்கள்,திமுக நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர். முதல்வருடன் தலைமைச் செயலர் முருகானந்தம், முதல்வரின் செயலர் சண்முகம் உள்ளிட்டோரும் சென்றனர்.
டெல்லிக்கு பகல் 12.50 மணிக்கு வந்தடைந்த முதல்வரை விமான நிலையத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, எம்.பி.க்கள், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன்,பி.வில்சன், செல்வகணபதி உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். விமான நிலையத்தின் வெளியேதிரண்டிருந்த தமிழர்களும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தமிழ்நாடு இல்லம் சென்ற முதல்வர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.பிற்பகலில், டெல்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
2026 சட்டப்பேரவை தேர்தல், இண்டியா கூட்டணி குறித்து அவர்கள் தீவிர ஆலோசனை நடத்தியதாககூறப்படுகிறது. அப்போது, டி.ஆர்.பாலுவும் உடன் இருந்தார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: டெல்லியில் சோனியா காந்தி, அன்பு சகோதரர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்தேன். அவர்களை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது. ஒருபோதும் இது வெறும் சந்திப்பாக இல்லாமல், குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வையே அளிக்கிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி சாணக்கியபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
நலம் விசாரித்தார்: தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வரும் தமிழக சுற்றுலா பயணி பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்வுகளின்போது தமிழக பொதுப்பணி துறை
அமைச்சர் எ.வ.வேலு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த கல்வி (சமக்ர சிக்ஷா) திட்ட நிதி, பேரிடர் நிதி உள்ளிட்ட நிலுவை நிதிகளை விடுவிக்குமாறு இந்த கூட்டத்தில் அவர் வலியுறுத்துகிறார். நேரம் கிடைக்கும் பட்சத்தில், பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு, இரவு 10.30மணிக்கு சென்னை திரும்புகிறார்.