தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் மீதான வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட்

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் மீதான வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில், “தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், துாய்மைப் பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் மத்திய அரசும் நமஸ்தே திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டப்பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் முக்கிய பங்கு உள்ளது. முறைகேடுகளை அம்பலப்படுத்தியதன் காரணமாகவே எனது வீட்டுக்குள் தூய்மைப் பணியாளர் சீருடையில் வந்த சில சமூகவிரோதிகள் கழிவுநீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனர். முறைகேடு தொடர்பாக புகார் அளித்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மே 23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் இந்த திட்டத்தில் 213 தகுதியான பட்டியலின சமூகத்தை சேர்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கூடாது” எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த திட்டத்தால் உண்மையாகவே பட்டியல் மற்றும் பழங்குடியினர் பயனடைய வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். இந்த திட்டத்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் உறவினர் வீரமணி இயக்குனராக உள்ள தலித் வர்த்தக மற்றும் தொழில் சபை மற்றும் ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் அமைப்புகளே அதிக லாபம் அடைகின்றன. அதேநேரம், இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கு பாராட்டுகள்,” என்று தெரிவித்தனர்.

அப்போது ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் தரப்பில், “இந்த திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள 213 தூய்மை பணியாயாளர்களும் பங்குதாரர்களாக சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in