

நாகப்பட்டினம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களை மிரட்டி, வலைகளை சேதப்படுத்தியதுடன், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி என ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்படையினர் பறித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான படகில் சண்முகம், ஜெயராமன், சக்திமயில், மணிமாறன் ஆகிய 4 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகு மீது மோதியதுடன், அவர்கள் கடலில் விரித்திருந்த வலை மீது ரோந்துக் கப்பலை மோதி சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், மீனவர்களை மிரட்டி, படகில் இருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, டீசல் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக வேறு படகில் வந்த நாகை மீனவர்கள், கடலில் தவித்த செருதூர் கிராம மீனவர்களை மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனர்.
தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.